தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற பிரபல வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, தேடப்பட்டு வந்த ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ‘மேகா பா-வாப்-வாப்’ என்பவரைப் பொலிஸார் விசித்திரமான மாறுவேடத்தில் சென்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குறித்த திருவிழாக்கூட்டத்தைப் பயன்படுத்திப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட முயன்ற இச்சந்தேகநபரைக் கைது செய்ய லோப்புரி மாகாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு விசேட வியூகத்தை வகுத்தனர்.
இதற்காக ஐந்து ஆண் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி என மொத்தம் ஆறு பேர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவினர், பளபளப்பான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பெண் நடனக் குழுவினரைப் (Dance Troupe) போலத் தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டனர். திருவிழாவில் பொதுமக்களோடு இணைந்து நடனமாடியவாறே சந்தேகநபரை மிகவும் இரகசியமாக நெருங்கி, எவ்விதச் சத்தமுமின்றி அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சான்றுப் பொருட்கள்,
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பின்வரும் பொருட்கள் பொலிஸாரினால் உத்தியோகபூர்வமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன, 53 வீரியமிக்க போதைப்பொருள் மாத்திரைகள்.
போதைப்பொருள் வியாபாரப் பொதிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 200 சிறிய பைகள்.
சட்டவிரோத இணைய வழி சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட்போன் ஒன்று.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராகப் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட இணைய வழிச் சூதாட்டத்தை (Online Gambling) நடத்தியமை ஆகிய பிரதான குற்றச்சாட்டுகளின் கீழ் லோப்புரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த அதிரடிக் கைது நடவடிக்கைக்குப் பின்னர், அந்த அதிகாரிகள் தங்களின் நடன உடைகளைக் கூடக் கலைக்காமல், கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபருக்குப் பின்னால் நின்றவாறே பொலிஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வப் புகைப்படம் ஒன்றினை எடுத்துக் கொண்டனர்.
“நாங்கள் சும்மா சென்று அவரை எப்படிக் கைது செய்வது? ஆடை வாடகைக்கு எடுத்த பணம் வீணாகிவிடுமே!” என்ற நகைச்சுவையான பின்னூட்டத்துடன், பொலிஸ் அதிகாரிகளே தங்களது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து, இது தற்போது உலகளவில் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








