முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பாசன் அமரசேகரா இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
எனினும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவர்களது வீடுகளுக்கு சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதவான், அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








