இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்கும் யோசனையை அமெரிக்க நிர்வாகம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் தகவலின்படி, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத மேலதிக வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீத கூடுதல் வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கவும், அதனுடன் தொடர்புடைய சட்டங்களை திறம்பட அமல்படுத்தவும் இலங்கை போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், ஆடை மற்றும் துணி வகை இறக்குமதிகளுக்காக குறைந்த வரி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருட்களை அமெரிக்க சந்தைக்கு அனுமதிக்கும் சிறப்பு நடைமுறை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான விரிவான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த முன்மொழிவுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை 6ஆம் திகதி வரை பெறப்படவுள்ளதுடன், ஜூலை 7ஆம் திகதி பொது விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








