மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் அறிவுச்சோலை கல்வி கழகத்தின் நிதி அனுசரணையுடன் பகலவன் கல்வி நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலையத்தின் தலைவரும் பாடசாலையின் அதிபருமான பொன். இராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.
பிரான்ஸ் அறிவுச்சோலை கல்வி கழகம் வடக்கு கிழக்கு மலையகம் உட்பட்ட பிரதேசங்களில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் மாலை நேர தனியார் வகுப்புகளை நடாத்தி வருகிறது.
இந்த திட்டத்திற்கு அமைய கிழக்கில் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முதற்கட்டமாக பகலவன் கல்வி நிலையத்தை ஆரம்பிக்க பிரான்ஸ் அறிவுச்சோலை கல்விக்கழகம் ஸ்தாபகர் வினோத் , மற்றும் சுவிஸ் நாட்டில் உள்ள சுதா உறவுச்சோலை மறுவாழ்வு கழகம், சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஆகியோரின் நிதி பங்களிப்புடன் ஆரம்பித்துள்ளனர்.




இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதிகளாக வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன், கோறளைப்பற்று வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் நேசகஜேந்திரன், வாகரை பிரதேச செயலாளர் திருமதி அ.அமலினி சிறப்பு அதிதிகளாக மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் தேச கீர்த்தி கலாநிதி சிவ ஸ்ரீ வேலு சுரேஷ்வர சர்மா, கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன பேராசிரியர் க.சீவரெத்தினம்,
இலண்டன் அரும்பு முன்பள்ளி கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராஜா சச்சிதானந்தம், விசுவமடு சிகரம் இலவச கல்வி நிலைய பணிப்பாளர் குமாரவடிவேல் செல்வகலா, அலிகார் தேசிய பாடசாலை சிரேஷ்ட உயிரியல் ஆசிரியர் திருமதி விஜயலட்சுமி தனராஜ். கிழக்கு வடமத்திய மாகாணம் விடியல் அறக்கட்டளை இணைப்பாளர் சைவப்புலவர் காலன் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பகலவன் கல்வி நிலையத்துக்கான பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தனர்
அதனை தொடர்ந்து பாடசாலையில் இருந்து பல்கலைகழகத்துக்கு தெரிவான மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்களை நினைவு கேடயம் வழங்கி கௌரவித்தனர்.








