மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் சுவேந்திரகுமார் உதவி வண்ணக்கராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலருமான சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவுசெய்யப்பட்டிருந்த 1,487 வாக்காளர்களில் 768 பேர் வாக்களித்தனர்.
வண்ணக்கர் பதவிக்கான தேர்தலில் 39 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 729 செல்லுபடியான வாக்குகள் பதிவாகின. இதில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தியாகராஜா விக்ரமன் 615 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். கும்பம் சின்னத்தில் போட்டியிட்ட சிவகுரு உமாகேசன் 114 வாக்குகளைப் பெற்றார்.
உதவி வண்ணக்கர் பதவிக்கான தேர்தலில் 45 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன், 723 செல்லுபடியான வாக்குகள் எண்ணப்பட்டன. மயில் சின்னத்தில் போட்டியிட்ட உதயகுமார் சுவேந்திரகுமார் 665 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஓம் சின்னத்தில் போட்டியிட்ட சுகுமார் லக்ஸ்மன் 158 வாக்குகளைப் பெற்றார்.
இதனையடுத்து, தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் சுவேந்திரகுமார் உதவி வண்ணக்கராகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
இதேவேளை, கோட்டைமுனை ஆதிசைவ வேளாளர் குல வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கர் தெரிவுகள் போட்டியின்றி இடம்பெற்றதாகவும், கந்தலிங்கம் புவனச்சந்திரா வண்ணக்கராகவும், இராசசிங்கம் லோகேஸ்வரன் உதவி வண்ணக்கராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட குல வண்ணக்கர்களும் பின்னர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், தேர்தலை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

















