சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் பசன் அமரசேன இதற்கான அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, அதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையின் போது, வழக்கின் முதலாவது சந்தேகநபரான பெசில் ராஜபக்ஷவுக்கு அறிவித்தல் அனுப்புமாறு CID தரப்பு கோரிக்கை விடுத்தது. எனினும், ஏற்கனவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.
தேவையெனில் சர்வதேச பிடியாணை பெறுவதற்கான சத்தியக்கடதாசியை சமர்ப்பித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வழக்குடன் தொடர்புடைய சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் தலைவர் பாஸ்வர் குணவர்தன 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.








