ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து, அதன் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை நிலையற்றதாக்கும் அல்லது கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பொறுப்பான மற்றும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் வலுவான எதிர்க்கட்சி அவசியம் எனவும், தற்போதைய எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் சில வேலைத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அதிகாரம் தொடர்பான இறுதி முடிவை மக்கள் தான் தேர்தல்களின் மூலம் தீர்மானிப்பார்கள் என்றும், அதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.








