கொவிட்-19 காரணமாக தகனம் செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொவிட்-19 காரணமாக இறந்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி சுகாதார அமைச்சரிடம் வாய்மூலக் கேள்வி எழுப்பியிருந்ததாகவும், அதற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக முன்மொழிவு சமர்ப்பித்ததாகவும், அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சின் செயலாளர், கொவிட்-19 காலத்தில் இறந்தவர்களின் பெயர் விபரங்கள் அமைச்சில் இல்லை என தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அந்த தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பெறலாம் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் இந்த விடயம் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பதிவாளர் நாயகம் திணைக்களம், சர்வதேச முறையில் மரண காரணங்களை வகைப்படுத்தும் அடிப்படையில் தரவுகளை வைத்துள்ளதாகவும், மாவட்ட மற்றும் பாலின அடிப்படையில் மட்டுமே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு கொவிட்-19 காரணமாக பதிவு செய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மாவட்ட மற்றும் பாலின வாரியாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டதாகவும், அதற்கான முழுமையான பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் திரட்டி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.








