இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதன்முறையாக, தண்டவாளங்களைப் பயன்படுத்தாமல் புகையிரத எஞ்சின் ஒன்று பிரதான சாலை வழியாக வெற்றிகரமாக எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றது.
M5 வகையைச் சேர்ந்த 781 இலக்க புகையிரத எஞ்சின், கண்டியிலிருந்து பேராதனை நோக்கி விசேட கனரக போக்குவரத்து வாகனத்தின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு செல்லப்பட்டது.
மலையகப் புகையிரதப் பாதையில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான சேதங்களைச் சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயலால் கடுகண்ணாவ – கம்பளை இடையிலான தண்டவாளங்கள் சேதமடைந்ததால், அந்தப் பகுதியில் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான எஞ்சின்களையும் வழக்கமான முறையில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதனுடன், பேராதனை களுபாலம் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளால் கண்டி – பேராதனை புகையிரதப் பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததால், பிரதான சாலை வழியாக எஞ்சினை எடுத்துச் செல்லும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுடன், மகாவலி கங்கை மீது அமைந்துள்ள பிரதான சாலைப் பாலத்தை கடந்து பயணித்த முதல் புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுச் சிறப்பையும் M5-781 பெற்றுள்ளது.
இந்த அபூர்வ நிகழ்வை நேரில் காண ஏராளமான பொதுமக்களும் புகையிரத ஆர்வலர்களும் வீதியோரங்களில் திரண்டிருந்தனர். சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.








