கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வாக, புதிதாக நியமிக்கப்பட்ட 9 பெண் ஊழியர்களை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 6ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 சுகாதார உதவியாளர்களில் 9 பேர் முஸ்லிம் பெண்களாவர். அவர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கான இடமாற்றக் கடிதம் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், குறித்த 9 ஊழியர்களும் நாளை பணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் கல்முனை ஆதார வைத்தியசாலை, வைத்தியசாலை குழுவின் தலைவர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் வைத்தியசாலை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.








