இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 120 பந்தயப் புறாக்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரொன்றை சோதனையிட்டபோது, ஆறு இரும்புக் கூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 பந்தயப் புறாக்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, காருடன் புறாக்களையும் கைப்பற்றிய பொலிஸார், மதுரை பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், பந்தயப் புறாக்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாட்டுப் படகு ஒன்று பொலிஸாரைக் கண்டதும் கடலுக்குள் தப்பிச் சென்றதாகவும், அதனைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடல் வழியாக பந்தயப் புறாக்களை கடத்த முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








