இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் ‘மோசடிக்கு ஆளாகாதீர்கள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஒரு மணி நேரத்தில் உங்கள் கணக்கு முடக்கப்படும்” போன்ற அவசரச் செய்திகள் மற்றும் அழைப்புகள் மூலம் மோசடிக்காரர்கள் மக்களை பதற்றமடையச் செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அவசரம்’ என்ற உளவியல் அழுத்தத்தை பயன்படுத்தி பொதுமக்களின் பயம் மற்றும் பதற்றத்தை சாதகமாக்கி, வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரும் எதிர்பாராத தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் கிடைத்தால், அவற்றை நிதானமாகச் சரிபார்த்த பின்னரே எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நுகர்வோரின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இணையவழி நிதி மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.








