நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (07) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகள் தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
அனுராதபுரம் – தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கு அருகே, கெப் ரக வாகனமொன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஹிதோகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கரந்தெனிய மடக்கும்புர – கொடவெல குறுக்கு வீதியில், முன்னால் சென்ற மிதிவண்டியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 50 வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், ஏ-09 வீதியின் ராமநூர் பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற 48 வயதுடைய பாதசாரி மீது மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் அவர் எதிரே வந்த காரில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிகம – கீரியன்கள்ளிய வீதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.








