நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலை விசேட உத்திகள் பிரிவைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்த மோதலில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே, உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக அதிகாரிகளின் அஞ்சலிக்குப் பின்னர், உடல்கள் இறுதிச்சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.








