நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பெண் கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள ஆண் கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிற சிறைச்சாலைகளில் உள்ள வசதிகளை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அங்குணகொலபெலஸ்ஸ, பூச மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் மூன்று கைதிகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அண்மையில் அங்குணகொலபெலஸ்ஸ மற்றும் பூச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்த இரண்டு கைதிகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளதுடன், இந்த மூன்று மரணங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.








