ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.
இன்றைய (09) காலை 6.00 மணி நிலவரப்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், இது 1.03 சதவீத உயர்வாகும்.
அதேவேளை, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், 1.01 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.57 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், 6.67 சதவீத பாரிய அதிகரிப்பும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், இலங்கை நேரப்படி நேற்றிரவு 10.00 மணியளவில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 80 அமெரிக்க டொலரை எட்டியிருந்தது.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள், ஈரான் முன்னதாக கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெற்றால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் இதுவரை உத்தியோகபூர்வ பதிலை வெளியிடவில்லை. எனினும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாக பதிலடி வழங்கப்படும் என அந்நாட்டு மூத்த அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








