டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அமித் குமார, டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த சில சுகாதார ஊழியர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறினார்.
கொழும்பு மாவட்டம் முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாகவும், பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் சோதனைகளின் போது, கடமைகளை முறையாக நிறைவேற்றாத 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 12,25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 494 வீடுகள், 134 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், 4 பாடசாலைகள் மற்றும் 2 வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் பாரபட்சமின்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








