பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, சம்பவம் இடம்பெற்ற நாளில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, அவசரப் பணி இருப்பதாகக் கூறி தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பொறுப்பதிகாரி அழைத்துள்ளார்.
அங்கு சென்ற பின்னர், தனக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.







