மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் அண்மையில் சேதமடைந்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தற்காலிக பெய்லி பாலம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததை அடுத்து அப்பாதை வழியாகப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக பெய்லி பாலம் அனுப்பி வைக்கப்பட்டு, வீதி அபிவிருத்தித் திணைக்களம் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்தது.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட. கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு. கிருஸாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவான பொதுமக்கள் அந்த வழித்தடத்தின் ஊடாகப் பயணித்தனர்.
இதேவேளை, இது தற்காலிக பாலம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக பாலம் திறக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, நகரின் பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து மீண்டும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








