21 வயதுடைய இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காத்தான்குடி நகர சபையின் 50 வயதுடைய உறுப்பினர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த, ஒரு குழந்தையின் தாயான குறித்த பெண், சம்பளம் தொடர்பான விடயத்திற்காக ஹோட்டலுக்கு வருமாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஹோட்டலுக்குச் சென்றிருந்த பெண் அறையொன்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, சந்தேகநபர் அறைக்குள் நுழைந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், காத்தான்குடி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








