அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில், வீட்டின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் 48 வயதுடைய இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினம் காலை அவர் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், கைது செய்யப்பட்டபோது கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (SOCO) அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தங்காலை தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








