காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பதன்படி, காரைநகரிலுள்ள வீடொன்றில் இருந்து 1,600 கனேடிய டொலர்கள், ஒரு ஜோடி காப்புகள் மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றொரு வீட்டில் இருந்து 400 யூரோக்களும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தன.
சம்பவங்கள் தொடர்பாக வீட்டு உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








