மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதம் தொடர்பாக இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், தனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தான் பதவியிலிருந்து விலகும் முடிவை தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் எடுத்ததாகவும் பேராசிரியர் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன், முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக உள்ளது. அந்தப் பதவியில் இருந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக, செயலாளர் பதவியின் கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.








