இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் இன்று (15) மாலை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.
வழமையான மரபின்படி, கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, அது ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் நான்கு சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களின் “அரோகரா” பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி திரண்டிருந்த பக்தர்கள் இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆடிவேல் விழாவை முன்னிட்டு உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா வழியாக அடர்ந்த கானகப் பாதையில் புனித பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் முதல் குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்தனர். பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள் ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.

ஆடிவேல் விழாவின் முதலாவது திருவீதி உலா (பெரஹரா) இன்று இரவு நடைபெறவுள்ளதுடன், 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவு நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி புனித மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்ற நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய வேல் அனுப்பும் நிகழ்வும் இன்று மாலை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
மாலை 5.55 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விசேட பூஜைகள் இடம்பெற்றதையடுத்து, சரியாக மாலை 7.00 மணிக்கு பாரம்பரிய வேல் அனுப்பி வைக்கும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விசேட பூஜைகளில் பங்கேற்று தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.








