நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர வெளியிட்டுள்ள தகவலின்படி, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நக்கிள்ஸ் வனப்பகுதியின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த காட்டுத்தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, உலகளாவிய ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கம் இலங்கையிலும் உணரப்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ‘எல் நினோ’ தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








