அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்ப வேண்டும், இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பென்சில்வேனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளும் உடனடியாக அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஈரான் முன்வரவில்லை என்றால், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தொடர்பான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவித்தார்.

இதற்கு முன், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலால் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் அரசின் தகவலின்படி, அண்மைய தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ட்ரம்பின் சமீபத்திய கருத்துகள் மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளன.








