கட்டுநாயக்க, கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) பிற்பகல் மினுவாங்கொட, தேவோலபொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர், கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றபோது, அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை எடுத்துவர அதிகாரிகளில் ஒருவர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர், தன்னுடன் இருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தப்பியோடிய சந்தேகநபர் பின்னர் மினுவாங்கொட, தேவோலபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








