நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலகச் சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வது எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமில்லாமல் போகலாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உருவாகக்கூடிய எரிபொருள் விநியோக சவால்களை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணித்து வரும் நிலையில், எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது டீசல் நுகர்வு 11 சதவீதமும், பெற்றோல் நுகர்வு 9 சதவீதமும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மத்திய கிழக்கில் நீடிக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து பராமரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும், உலகளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை முன்னிட்டு, நாட்டிற்கு இடையறாத எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்பதால், சில சந்தர்ப்பங்களில் உலகச் சந்தையில் காணப்படும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகக்கூடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.








