யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகழாய்வின் 34ஆவது நாளான இன்று (16), மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் கண்டறியப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், 3 பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், ஒரு பாசிமணியும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 130 சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் தலைமையில் இடம்பெற்று வரும் இந்த அகழாய்வில், இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 மனித எலும்புத் தொகுதிகளில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








