நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
மாற்றப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் சில குடும்பங்களுக்கு இதுவரை தகவல் வழங்கப்படவில்லை எனவும், இது வலிந்து காணாமலாக்கப்படுதல் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் சிறைச்சாலை வாயில்களில் முடிவடையாது என சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, காவலில் உள்ள ஒவ்வொரு நபரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றப்பட்ட கைதிகள் தொடர்பான சித்திரவதை மற்றும் கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் கவலையளிப்பதாகவும், அவை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் குறித்த சிறைச்சாலை குற்ற நிகழ்விடமாக அறிவிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கைதிகள் நாட்டின் பல்வேறு தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 8ஆம் திகதிக்குள் மாற்றப்பட்ட இரண்டு கைதிகள் வெவ்வேறு சிறைச்சாலைகளில் உயிரிழந்துள்ளதாகவும், கைதிகள் மீது சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள் இடம்பெற்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாற்றப்பட்ட கைதிகள் தொடர்பில் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் சில குடும்பங்களுக்கு அவர்களின் உறவுகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைக்கவில்லை எனவும், அரச காவலில் உள்ள நபர் தொடர்பான தகவல்களை மறைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் வலிந்து காணாமலாக்கலுக்கு சமமானதாக இருக்கக்கூடும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக தகவல்களை வழங்குதல், சட்டத்தரணிகளின் அணுகலை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தடையற்ற அணுகலை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் மட்டுமன்றி, காவலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மரணங்கள் மற்றும் கைதிகள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உடனடி, சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








