செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான நேற்று (17), மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ஏழு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சேதமடைந்த மோதிரம் ஒன்று, விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பு மோதிரம் ஒன்று மற்றும் குவியலாகக் காணப்பட்ட இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அகழ்வின்போது கண்டறியப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மொத்தமாக 89 நாட்களை எட்டியுள்ளன. அதன் அடிப்படையில், இதுவரை 431 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 423 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகளும், சம்பவத்துடன் தொடர்புடைய தடயப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








