நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர்கள், திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தானிஷ் அலி, அமல் சாலிந்த (ஆர்மி அமில), உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தே மஹாநாம தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பிணைதாரர்களுக்கு அறிவித்தல் வழங்குமாறும், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் எந்தனி வேரங்க புஷ்பிக த சில்வா உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கோட்டை பொலிஸார் பலர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








