யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆவது நாளான நேற்று (23), மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின் போது, மூன்று எலும்புக் குவியல்கள், சில ஆணிகள் மற்றும் சிமெந்து துண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் போது மொத்தம் 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், 467ஆவது எலும்புக்கூடு இதுவரை கண்டறியப்பட்டவற்றிலிருந்து வேறுபட்ட தன்மையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அவரின் கூற்றுப்படி, அந்த எலும்புக்கூட்டுடன் சவப்பெட்டியின் அடையாளங்கள், மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கி மற்றும் காலுறைகள் காணப்பட்டுள்ளன. இதனால், குறித்த உடல் சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றம் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்று (24) வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.








