மட்டக்களப்பு பகுதியில் முகநூல் ஊடாக அறிமுகமான நபரின் மோசடியில் சிக்கி பெண் ஒருவர் ரூ.8 இலட்சத்து 37 ஆயிரம் பணத்தை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பெண்ணுக்கு சமூக ஊடகமான முகநூல் வழியாக தன்னை லண்டனில் வசிக்கும் மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். சில நாட்கள் இருவரும் இணையவழியாக உரையாடிய பின்னர், அந்த நபர் இலங்கைக்கு மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் அடங்கிய பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பொதிகளை விநியோகிக்கும் நிறுவனம் எனத் தம்மை அறிமுகப்படுத்திய நபர்கள், அந்தப் பார்சலை சுங்கத் திணைக்களத்தில் இருந்து விடுவிக்க முதலில் ரூ.87,000 செலுத்துமாறு கோரியுள்ளனர்.
அதை நம்பிய பெண், குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.87,000 பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர், மேலும் ரூ.3 இலட்சம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதையும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, பார்சலை விடுவிக்க கூடுதல் தொகை தேவைப்படுவதாக கூறப்பட்டதால், அவரது தாயாரும் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை அதே கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதற்குப் பின்னரும் மோசடி கும்பல் மேலும் ரூ.1 இலட்சம் மற்றும் அதன் பின்னர் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே பார்சல் முழுமையாக விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த பெண், இனி பணம் அனுப்ப முடியாது என தெரிவித்தபோது, அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்ற இணையவழி மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் தெரியாத நபர்களின் கோரிக்கைகளை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு தொடர்பும் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








