சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் பலர் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் 77 சதவீதத்தினருக்கும், பெண் அதிகாரிகளில் 56 சதவீதத்தினருக்கும் உடலியல் பலவீனங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த தகவல்கள், தொற்றா நோய்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டதாகவும், இது கவலைக்கிடமான சுகாதார நிலையை வெளிப்படுத்துவதாகவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் சுமார் 29 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 26 சதவீதம் பேர் வெற்றிலை அல்லது பாக்கு பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். பெண் அதிகாரிகளில் 5 சதவீதம் பேர் பாக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண் அதிகாரிகளிடையே மது அருந்தும் பழக்கமும் அதிகளவில் காணப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதனைகளின் அடிப்படையில், ஆண் அதிகாரிகளில் 28 சதவீதம் பேருக்கும், பெண் அதிகாரிகளில் 16 சதவீதம் பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஆண் மற்றும் பெண் அதிகாரிகளில் தலா 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண் அதிகாரிகளில் 13 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காணப்பட்டதுடன், சிலருக்கு சிறுநீரக செயல்பாட்டுக் குறைபாடுகளும் பதிவாகியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








