புத்தளம் – மாரவில பகுதியில் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் குறித்த சிறுமி தொடர்பான இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பை பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிறுமியுடன் பழகிய சந்தேகநபர், அவரை காதல் உறவில் ஈடுபடுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 5ஆம் திகதி “கடற்கரைக்கு செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மேலும் இரு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் பரிசோதகர் ரணவீர தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








