மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவருக்கு, அதனால் ஏற்பட்ட இழப்பீடாக இலங்கை மின்சார சபைக்கு ரூ.201,059.90 தொகையை செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் விநியோகத்தை தற்காலிகமாக துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக திஹாகொட, கம்புருபிட்டிய, அகுரெஸ்ஸ, முலட்டியான, தெய்யந்தர, மவரல, தெனியாய உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டதுடன், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த நபரின் குடும்பத்தினரை அழைத்து வந்து அவரை கீழே இறங்குமாறு சம்மதிக்க வைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, சம்பவத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்யுமாறு கம்புருபிட்டிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இழப்புத் தொகை ரூ.2 இலட்சத்துக்கும் அதிகம் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட குறித்த நபரிடம் இருந்து ரூ.201,059.90 தொகையை இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளன.








