இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் முழுமையாக வெளிப்படுத்தினால், அவருக்கு எதிராக வழக்குத் தொடராமல் இருப்பதற்கும் அல்லது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப் பெறுவதற்கும் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் இந்த முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின் ஊடாக, இதுவரை மேல் நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த வழக்குகளை மீளப் பெறும் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கான அதிகாரம் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், ஊழல் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட அல்லது வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், ஊழல் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது ஏனைய இலாபங்கள், குறித்த நபர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாகக் கருதப்படும் வகையிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதனிடையே, மாகாண அரச சேவை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவுடன் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் புதிய சட்டத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.








