செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (13) மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற மூன்று கட்ட அகழ்வுப் பணிகளிலும் இதுவரை 552 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 540 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பரிசோதித்து ஆவணப்படுத்தும் பணியை நேற்று ஆரம்பித்துள்ளனர். இதன்போது மேலும் 81 சான்றுப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி 56ஆவது நாளுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







