மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையிலான மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுவின் 2-வது அமர்வு நேற்று (13) மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களது பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன், கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை சார்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த 16.07.2025 அன்று நடைபெற்ற முதலாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
அத்துடன் சுருக்கு வலை பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளால் பாரம்பரிய மற்றும் சிறு அளவிலான மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுப்பதற்காகக் கடற்படை, பொலிஸார், கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டுக் பொறிமுறை குறித்து கலந்துரையாடப்பட்டது.
கரைவலைத் தொழில் என்பது ஒரு பாரம்பரியத் தொழில் என்பதால் அதனை முற்றிலும் தடை செய்யாமல், தகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திடம் இது குறித்த ஆய்வு ஒப்படைக்கப்பட்டது. மேலும் விரிவான ஆய்வுகளுக்காக ஒரு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து ஆராயப்பட்டது.

ஆள் பற்றாக்குறை காரணமாகக் கரைவலைக்கு பதிலாக டிராக்டர்கள் மற்றும் வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி, கரை எல்லைக்கு அப்பால் (சுமார் 6 – 7 நௌட்டிக்கல் மைல் வரை) சென்று அதிகளவில் மீன்களை அள்ளிச் செல்வதால், சிறு மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே, 1.5 நௌட்டிக்கல் மைலுக்கு அப்பால் கரைவலை பயன்பாட்டிற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
கடலில் மீன்பிடிப்பதை மட்டும் நம்பியிருக்காமல், கடல் மற்றும் குளங்களில் ‘கூண்டு மீன் வளர்ப்பு’ முறையை ஊக்குவிக்கவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பயன்படுத்தி இராள் பண்ணைகளை அமைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் ஜிடிபி பங்களிப்பு வட மாகாணத்தை விட அதிகமாக இருந்தபோதிலும், வறுமை நிலவும் மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது. எனவே, இராள் பண்ணை திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். காணி ஒதுக்கீட்டின் போது, வெளி முதலீட்டாளர்களுக்கு முன் உள்ளூர் மக்களுக்கு தலா 1 ஏக்கர் வீதம் காணி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முன்னுரிமை அளிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் பல ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தனர்.
இதன்போது, அம்பிளாந்துறை, துறைநீலாவணை மற்றும் உறுகாமம் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக ஓய்வறைகள் அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதேபோன்று, குறுமண்வெளி – மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஆகிய பகுதிகளுக்கிடையில் படகுச் சேவை இடம்பெறும் இடங்களில், பயணிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி மலசலகூடத் தொகுதிகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சிறிய குளங்களைத் தூர்வாரி, அவற்றில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மீன்வளர்ப்புடன், குறித்த குளங்களைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். இதனை சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு கல்லடி வாவிக்கு அருகில் அமைந்துள்ள ஐஸ் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்துவதன் மூலம் மீனவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த ஐஸ் தொழிற்சாலையை குத்தகைக்கு வழங்குவதற்கான கோரல் எதிர்வரும் மாத இறுதிக்குள் இடம்பெறும் என தெரிவித்தார்.
உறுகாமம் இறங்குதுறைமுகம் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அமைச்சரிடம் விளக்கமளித்தார்.
இதேபோன்று களுதாவளை பொருளாதார மத்திய நிலையில் இயங்கு நிலையில் இல்லாத நிலையில் அருகில் உள்ள நிலப்பகுதிகளில் மீன்பிடியை நோக்காக கொண்ட செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இதன்போது கோரிக்கை முன்வைத்த நிலையில் அது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கும், அதனைக் சாக்காக வைத்து அத்துமீறல்களில் ஈடுபடும் “சண்டையர்களுக்கும்” கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களும், கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளும் வீரர்களோ சண்டையர்களோ அல்ல அவர்கள் நொண்டியர்கள்” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தோடு இணைந்து மீன்பிடித்துறையிலும் உள்ள சட்டவிரோத செயல்களைச் சகித்துக் கொள்ள முடியாது இதன்போது அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.








