பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் ஒதுக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் பிரதான வீதியில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகிறது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் பயணிக்கக்கூடிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்கள் எவ்வித தடையும் இன்றி பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பேருந்து தரிப்பிடத்தை அணுகும் திசையில் 30 மீற்றர் வரையிலும், தரிப்பிடத்தை கடந்த பின்னர் 15 மீற்றர் வரையிலும் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, Bus Bays கொண்ட பேருந்து தரிப்பிடங்களில், அவற்றை அணுகும் பகுதியில் 15 மீற்றர் வரையிலும், வெளியேறும் பகுதியில் 10 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக, இந்த விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










