நாட்டிற்கு வெளியே உண்டியல் முறை மூலம் பல பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரையான விசாரணைகளில், குறித்த நான்கு வங்கி முகாமையாளர்களும் 89 வங்கிக் கணக்குகள் ஊடாக 10,151 தடவைகள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இவ்வருட ஜனவரி மாதம் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஜூன் 19ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.







