கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக பகிரப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவ்வாறான வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடாக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் முறையான அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமொன்றை அல்லது வெடிபொருட்கள் உற்பத்தி செய்யும் கூடத்தை உருவாக்கும் திட்டமா என்ற பலத்த சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அண்மையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியதாவது:
கிளிநொச்சியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் தியாகராசா குணதீபன் என்பவருக்கு எதிராக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கட்டுமானத்தில் ஈடுபட்டமை, ட்ராக்டரைப் பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்டமை, காடளிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.
மாறாக விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதுடன், அத்தகைய வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு இதனை தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்பன இன அடையாள அடிப்படையில் நோக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுவதை அவதானிக்கின்றோம். அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.








