கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தை நேரில் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில் நாடகத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு, முதலாம் ஆண்டு கற்கைநெறியைத் தொடர்ந்து வந்ததுடன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் உயிரிழந்த மாணவியையும் மயங்கி விழுந்த இரு மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும், மயங்கி விழுந்த இரு மாணவிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்கள்
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான ஏழு மாத காலப்பகுதியில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 164 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.








