கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (20) முதல் நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று (19) இரவு நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த இடமாற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








