முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் வழங்கல் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், மக்களின் தேவைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் தனியான பிராந்திய நிர்வாக கட்டமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குடிநீர் வசதியை விரிவுபடுத்த வேண்டிய தேவை தொடர்ந்து காணப்படுவதாகவும், குறிப்பாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
2026 ஜனவரி மாத தரவுகளின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8,500 குடும்பங்களுக்கு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளுக்கு நீர் இணைப்புகளை விரிவுபடுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு குடிநீர் வழங்கல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, காலதாமதமின்றி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைராசா ரவிகரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.








