மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்கு பகுதியில், கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள கைவினை முறையிலான தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 18ஆம் திகதி காலை Zamboye (ஜம்போயே) கிராமத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சுரங்கம் Nana-Mambéré மாகாணத்தில், Baboua நகரிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் 30 சடலங்கள் மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும், பின்னர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர் உள்ளிட்ட உள்ளூர் தரப்பினர், 100க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுரங்கத்தின் பல நிலத்தடி பாதைகள் இடிந்து விழுந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாதுகாப்பு வசதிகள் குறைந்த கைவினை முறையிலான சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








