தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, தனது 94ஆவது வயதில் காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1931ஆம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950ஆம் ஆண்டு ‘சவுகார்’ என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், கலைத்துறைக்கான பங்களிப்புக்காக 2022ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
தமிழில் அவர் இறுதியாக சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் அவரது 400ஆவது படமாகவும் அமைந்தது.







