அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கடுமையான இதய நோய் நிலைமையை கருத்திற்கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் தொடர்ந்து வைக்காமல், விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரது மனைவி மனோரி சலே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், தேசிய வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு சூழலில் இருந்து தனது கணவரை மீண்டும் CID பொறுப்புக்குக் கொண்டு செல்லும் எந்தவொரு நடவடிக்கையும் அவரது உயிருக்கு உடனடி மற்றும் பாரதூரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் சிறைவாசம் அனுபவிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூன் 7ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் இதயவியல் பிரிவில் வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் அவர் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதயச் செயற்பாடு தொடர்ந்து பலவீனமடைந்ததன் காரணமாக அவர் இதயச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவரது இதயத்தில் தானியங்கி இதயத் துடிப்பு சீராக்கி கருவி (Pacemaker) பொருத்தப்பட்டுள்ளதாகவும் மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனது கணவர் மிகவும் ஆபத்தான சுகாதார நிலைமையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ச்சியான மற்றும் விசேட மருத்துவக் கண்காணிப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பின்னர் அதனை மேலும் நீடிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலில் இருந்து தனது கணவரை வெளியேற்றி மீண்டும் CID பொறுப்புக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அவரது உயிருக்கு தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டபூர்வமான விசாரணைகளுக்கு தடையாக இருக்கவோ, அவற்றை தாமதப்படுத்தவோ அல்லது தலையிடவோ தனது கணவருக்கோ குடும்பத்தினருக்கோ எந்தவித நோக்கமும் இல்லை எனவும், சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மனோரி சலே தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.








