யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது இதுவரை 584 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
மனித எச்சங்களை அடையாளம் காணும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








